வாங்கப்போனது என்ன? கிடைத்தது என்ன?



"இண்டைக்கு விடியக்காத்தாலை எழும்பி முழிவியளத்திற்கு யாரிலை முழிச்சனோதெரியாது"எண்டு,மண்டையை போட்டுடைத்துக்கொண்டிருந்தாராம் நம்மவர்.
”எங்கையோ போய் கொண்டிருந்த என்னை கலைச்சுக்கொண்டு வந்தானே, என்ன கஷ்டகாலம் என்னைக்கலைச்சுக்கொண்டு வந்ததோ” என்று அழாத குறையாக சொல்லிக்கொண்டிருந்தார் நம்மவர்.

"என்னடா என்ன நடந்தது" எண்டு நண்பன் கேட்டால் சொல்லுறாரேயில்லை.

"டேய் உனக்குள்ள யோசிக்காமல் என்ன நடந்தது எண்டு சொல்லு,அப்பத்தான்.. உனக்கு மனசுக்கு நிம்மதியாக இருக்கும்" எண்டு இன்னுமோர் நம்மவரான அவரின் நண்பர் கேட்க

”டேய் நான் நடந்ததை நினைச்சு சிரிக்கவோ அல்லது எந்நிலையை யோசிச்சு அழவோ"என்று மண்டையப்போட்டு உடைத்தபடியே இருந்தார்.
" அப்பவும் முந்த நாள் அம்மா சாஸ்திரம் பாத்துப்போட்டு சொன்னவா,இப்ப ஏழரை சனியன் கூடிக்கிடக்குது எண்டு ,ஆனால் இப்படி சனியன் விடுதேடிவந்து குந்தியிருக்கும் எண்டு யாருக்கு தெரியும்?நல்லூர்முருகா............."என்று வேண்டித்திட்டாத தெய்வங்களுமில்லை


"இவன் என்னடா ஒண்டுமே சொல்லுறான் இல்லையே" என்று நினைத்த நண்பரான நம்மவர் தன் புலனாய்வினை முடுக்கிவிட்டபோது கிடைத்த கதைதான் இது


விடியற்காலையில் வழமை போலவே பல்கலைக்கழகத்துக்கு புகையிரதம் மற்றும் பஸ்சில் பயணம் செய்வதுபோல் அன்றும், ஆனால் சற்று தாமதமாக வீட்டிலிருந்து புறப்பட்டதால் கொஞ்சம் அவசரமாக பஸ்சில் ஏறுவதும், புகையிரதத்தை ஓடிபிடிப்பதுமாக, பாதைகளை கடப்பதுமாக பல்கலை நோக்கி ஓடுகிறார் நம்மவர்.
ஒருவேளை பாதையொன்றினை குறிக்கிடுவதற்காக இரண்டுபக்கமும் பார்க்கும்போது காரினுள் இருக்கும் இரு இளைஞர்களின் அழைப்பு,
தன்னத்தான் அழைக்கிறார்களோ தெரியாது என்ற பெரிய சந்தேகம் இருப்பதால் அவர்களை என்னவென்று கேட்பதா என்றவாறான ஒரு சின்ன எண்ணம்.
என்றாலும் ”இந்த நாட்டிலை ஆயிரம் பேர் இருப்பாங்கள் என்னத்துக்கு சும்மா கதைச்சு வீண்வம்பு” என்று நினைத்த நம்மவர் சற்று விலகிச்சென்றாராம்.

ஆனாலும் நம்மவரை நோக்கி அவர்களின் கார் நகர்கிறது.
”இதென்ன ஆக்கினையெடாப்பா” என்றவாறு நின்று என்ன என்று பார்த்தராம் நம்மவர்.

ஏனென்றால் நம்மவர் ”அச்சம் என்பது மடமையெடா அஞ்சாமை திராவிடர் உரிமையெடா” பரம்பரையிலிருந்து வந்தவரல்லவா. நின்று பார்த்தாராம் ஒரு பார்வை.
ஆனாலும் வந்த அந்த இளைஞர்கள் மிகவும் சிரித்த முகத்தோடு இருக்க ஒரு இளைஞர் ஒரு பெட்டியுடன் எழுந்து வந்து அந்த பெட்டியை திறந்து காட்டினால் அதற்குள் ஒரு அழகிய மடிக்கணனி(லப் டொப்).
”இதை நான் விற்கப்போகிறேன் உங்களுக்கு வேணுமா? கடையிலை வாங்கினால் 400 பவுணுக்கு கிட்ட வரும், எனக்கு 200 பவுண் தந்தால் போதும்” என்று சொல்ல
நம்மவருக்கு ”இதை வாங்கினால் என்ன” என்று என்ற சின்ன எண்ணம்.
என்றாலும் "சிலவேளைகளில் ஏமாற்றக்கூடியவர்களுக்கும் இந்த லண்டனில் குறைவில்லை சும்மா ஏமாத்துவார்கள் என்ற பயம்"
"இருந்தாலும் வாங்கலாமா என்று பரிசோதித்துபார்ப்போம்" என்று பரிசோதிக்க ஆரம்பித்தார் நம்மவ்ர்.

பரிசோதிக்கும்போது நம்மவருக்கு அது பிடித்துவிட்டது.இதை எப்படியாவது விலையைக்குறைத்தேனும் வாங்கியேயாக வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்தவராய்
"இப்ப என்னிடம் நீங்கள் கேட்கும் பணம் இல்லை, இன்னும் விலையைக்குறைத்தால் வாங்கலாம்" என்று நம்மவர் சொல்ல விலை நிர்ணயிப்பிற்கான பேச்சுக்கள் ஆரம்பமகியதாம்.
இறுயிதில் இதற்கான முடிவு எட்டப்பட்டு அந்த ,மடிக்கணணி நூற்றியைம்பது பவுண்களுக்கு தருவதாக அந்த இளைஞ்ன் சம்மதிக்க "பணம் எடுப்பதற்கு வங்கிக்கு நம்மவர் செல்ல வேணும்" என்று சொல்ல நம்மவரை அவர்கள் தங்கள் காரிலேயே ஏற்றிக்கொண்டு சென்றார்களாம்.
நம்மவருக்கு எப்படி அந்த காரில் ஏறும் அளவுக்கு அந்த துணிச்சல் வந்தது என்றால் அந்த மடிக்கணணியில் இருக்கும் ஆர்வத்தை தவிர வேறொன்றுமில்லை.

பல்கலை செல்வதற்கு புறப்பட்ட நம்மவர் அதற்கு செல்லாமல் மடிக்கணனி வாங்கும் கனவு நனவாகிறதே என்ற ஆர்வத்தோடு வங்கியில் பணம் எடுத்தவராய் மீளவும் மடிக்கணணியை பரிசோதிக்கிறார்.கணனிகள் பற்றிய அறிவு சற்று நிறைந்த இந்த நம்மவர் தாறுமாறான கேள்விகளால் பரிசோதித்தாராம்.
நிறைவான பதில்கள், தரமான மடிக்கணணி என்ற நிறைந்த மனதோடு மடிக்கணணியை பெட்டியோடு வாங்கியபடி வீட்டுக்குவந்தார்.
வீட்டுக்குவந்து நண்பர்களுடன் வெறும் நூற்றியைம்பது பவுண்களுக்கு வாங்கிவிட்ட மடிக்கணணியை பற்றிய கதையோடு மடிக்கணணியை ஆரம்பிக்க ஆர்வத்தோடு திறக்கிறாராம். ஆர்வத்துடன் திறந்தவருக்கு ஆச்சரியம் தான் காத்திருந்தது!!!!!!!!!????????

என்னடா ஆச்சரியம் என்றால்
சிலவேளைகளில் எதிர்பார்க்காத திறன்கள் மடிக்கணணியில் காணப்பட்டிருக்கும்
.மடிக்கணணி திறக்கும் பொது "டமார்" என்று வெடித்திருக்கும்.
மடிக்கணனியின் உள்ளே சில வேளைகளில் மின்கலம் (பற்றரி) இல்லாது இருந்திருக்கும்.(என் றாலும் பரிசோதிக்கும்போது இருந்திருக்குமே)
ஆனால் அப்படி ஒன்றுமே நடக்கவில்லையாம்
அப்ப ஏன் தான் நம்மவர் மண்டையைபோட்டுடைக்கிறார்.

உண்மையில் பெட்டியை திறந்தவருக்கு ஆச்சரியம் இல்லை ஏமாற்றம் தான் காத்துக்கிடந்தது. பெரியளவு பணங்கொடுத்து பெரியளவு எதிர்பார்போடு திறந்த அவருக்கு பெட்டியினுள் வெங்காயம் தான் கிடந்தது.


வெங்காயம் மிகச்சிறப்பாக பொதியடைக்கப்பட்டு மடிக்கணணி வரும் பெட்டிக்குள்ளேயே சிறப்பாக பொதிசெய்யப்பட்டிருந்தது.உண்மையில் அந்த வெங்காயத்தின் விலை பத்து பவுன்களும் பெறமாட்டாது.

"இறுதிவரை மடிக்கணணியை பரிசோதித்த நம்மவருக்கு பெட்டிக்குள் வெங்காயம் வந்தது எவ்வாறு?"
"வெங்காயம் வாங்குவதற்காக பல்கலையும் போகாமல் நேரத்தையும் செலவழித்து இறுதியில் பணத்தையும் இழந்துவிட்டேனே"
என்றவாறு நம்மவர் ஏமாறிய முகத்தோடு குழம்பியபடி மண்டையைப்போட்டுடைத்தார்.
"போனது போகட்டும் இனி ஆகவேண்டியதைப்பார்க்க வேண்டும்" என்று மனதை திடம்படுத்தி
இப்போ அடிக்கடி சொல்லும் இந்த நம்மவர் அந்த ஏமாற்றும் இளைஞர்களை தேடித்திரிகிறார்.

இந்த சம்பவம் உண்மைச்சம்பவமே.இவ்வாறான சம்பவங்கள் லண்டனில் இடம்பெறுவதாக சொல்லப்படுகின்றன.பிரபலமான வானொலியொன்றில் ஒரு நிகழ்ச்சியில் கூட ஒரு நேயர்
"ஏமாற்றம்" பற்றிய சுவாரஷ்யமான கருத்துப்பகிர்வின் போது இதேவிடயம் குறிப்பிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இது இன்னுமொருவர் இவ்வாறு புலம்பெயர் தேசத்தில் ஏமாற்றப்படகூடாது என்ற நோக்கத்துடனும் இது படிப்பினையாக இருக்கும் என்ற எண்ணத்துடனும் பதிவிடப்படுகிறது.

2 comments:

வடலியூரான் said...

நல்லதொரு படிப்பினை தான். அவர்களுக்கு இவர் ஒரு "வெங்காயம்" என்று முதலே தெரிந்திருக்கின்றது போல.. லொள்

Nithy Samy said...

சிரிப்பதா அழுவதா இத்தகைய நிலைமைகளை எண்ணி, ஐக்கிய இராட்சியத்தின் Leicester
பகுதியிலும் இப்படியான சம்பவங்கள் இடம் பெறுவது அதிகம். அண்மையில் ஒருவருக்கு சுமார் £400 பவுன்சுகள்
மதிக்கக்கூடிய கைதொலைபேசியைக் காட்டி அவருக்கு அதை £60 பவுன்சுகளுக்கு தருவதாக கூறி ஆசை வார்த்தைகள் சொல்லி விற்றுவிட்டு சென்று விட்டார்கள். வாங்கியவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மனைவிக்கும் காட்டி பேரம் பேசினாராம் மனைவியோ £40 பவுன்சுகளுக்கு தனக்கு தருமாறு கேட்டாராம்,
வாங்கியவர் கர்வத்தோடு தர மறுத்து விட்டார், பின்னர் கைத்தொலைபேசியில் சந்தேகம் வர வாங்கியவர் ஒரு கைத்தொலைபேசிகள் விற்கும் கடைக்கு எடுத்துச் சென்றாராம்... என்ன ஏமாற்றம் அது கடைகளில் மாதிரிக்கு வைக்கப்படும் ஒரு நகல் என்பது தெரிய வந்தது. என்ன சிரிப்பு என்றால் வாங்கியவர் எவ்வளவு பிந்தி அறிந்திருக்கிறார் தான் ஒரு வெங்காயம் என்று ஆனால் வெங்காயத்தை வாங்கியவருக்கு உடனுமே புரிந்திருக்கும்.
பிற்குறிப்பு- வாங்கியவர் ஒரு இந்திய சகோதரன் ஆனால் விற்றவரோ நம்ம நாட்டு சகோதரன்