வலைப்பதிவில் ஒரு வயது

நான் ஒரு சின்னபொடியன்



கரவைக்குரல் வலைப்பதிவில் ஒருவருடம் தாண்டி இரண்டாவது வருடத்தில் இன்றுடன் கால் பதிக்கிறது.
பார்த்தவைகளும்,என்னுள் பதிந்தவைகளும்,நான் பட்டவைகளும்,
கொஞ்சம்சிரித்தவைகளும்;அவற்றுள் சொல்லக்கூடியவைமட்டும்,அவ்வப்போது
அறிந்தவைகளும்,மனதினுள் குமுறியவைகளும்;அவற்றுள் கக்கக்கூடியவை மட்டும்,
சற்று வித்தியாசமாக சிந்தித்தவைகளுமாக எழுதிவந்திருந்தேன்.

எப்பவோ மனதினுள் குடிகொண்டிருந்த ஆசையால் திடீரென ஒருநாள் "சும்மா"
ஆரம்பித்ததுதான் இந்த வலைபூ.அன்றைய விடியற்காலையில்க்கூட எனக்கு தெரியாது இப்படி ஒரு தளம் எனக்காக உருவாகுமென்று.அலுவலகத்தில் அதிகாரி வரவில்லை அன்று,புதுவருடம் கழிந்ததால் எல்லோரும் விடுமுறை எடுத்த காலம்,நான் மட்டும் அலுவலகம் போனதால் அமைந்த சந்தர்ப்பங்கள் எல்லாமே கூடிவர கரவைக்குரல் என்ற நாமம்கூட அப்போதே மனதினுள் பிறந்து விட உருவாகியது தான் கரவையின் ஒசை.

அன்று பிறந்த ஒசை அது மழலையாகவே பேசி உங்களுடன் உலவிவருகிறது.என்ன தான் பேசினாலும் அது மழலையின் மொழியேயென்று ஏற்றுகொண்டிருப்பீர்கள் என்ற எதிர்பார்ப்போடு எழுதிவருகின்றேன்.தாயகத்தின் துயரம் தோய்ந்த செய்திகளும் மக்களின் அவலங்களும் வலிகளுமே காதுக்கு வந்து கொண்டிருக்கிறது.குமுறியவை எல்லாம் கொப்பளிக்க முடியாத காலம்.என்றாலும் மனதிற்கு சந்தோசமும் நிம்மதியான காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

இவ்வளவு காலமும் இந்த வலையுலகில் நான் கண்டவர்கள் பல நூறு.ஆக்கபூர்வமான கருத்தைத்தந்து எழுத்துக்கு உரமூட்டியோர் பலர்.வித்தியாசமான பார்வைகளை என் பதிவுகளில் நோக்கி பதிவில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் பற்றி கருத்திட்டோரும் உளர்.நடிகர் அண்ணைரைட் பாலசந்திரன் அவர்கள்,எழுத்தாளரும் கலைஞருமாகிய உடுவை எஸ்.தில்லைநடராஜா அவர்கள்,க.தே.தாசன்,பேனாவே பித்தாக உள்ளவன்(பேனாப்பிசாசு),தமிழ் வாசகன் ஆகியோர் எனக்கு உந்துசக்தியாக இருந்தவர்கள்,
என் முதல் வருடத்தில் நான் தவழ்ந்த காலத்தில் தத்தக்க பித்தக்க நடை நடக்க கை கொடுத்தவர்கள் இவர்கள்.இவர்களோடு என்னை தேடிவந்து பின்னூட்டம் இட்ட என் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவன்பான நன்றிகள்.
இதை விட நுனி நாக்கில் அமிர்தமாக பேசி கட்டிப்பிடித்து முதுகிலே ஓங்கி அடிக்கலாமா என்று வந்தோரை அமைதியான சிரிப்பாலே புறங்கையால் விலத்திவிட்டோரும் உளர்.இவர்கள் எனக்கு உந்து சக்தி.

இந்த முதல் வருட காலத்தில் என் கவிதைகளில் ஒரு சில கனேடியன் வானொலியில் அண்ணைரைட் புகழ் நடிகர் பாலசந்திரன் ஐயா அவர்களால் வானலைகளுக்கு கொண்டு சென்றது எனக்கு கிடைத்த புகழாக கருதுகின்றேன்.உலகமே பேசும் ஐயா அவர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு எனக்கு எழுதத்தெரியும் என்று என்னை எண்ண வைத்து வாழவைப்பதாக உணர்ந்து மிகவும் நன்றியுடையவனாக பணிகின்றேன்.
தொடர்ந்தும் மனதினுள் உற்சாகம்தரும் இறைவனையும் பணிந்து பல்வேறு நாடுகளிலும் இருந்தும் வரும் வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி கூருகின்றேன்
உங்கள் ஆதரவோடு எப்போதும் சின்னபொடியனாக மழலைமொழியோடு
தொடந்தும் கரவைக்குரல் ஒலிக்கும்.

5 comments:

தங்க முகுந்தன் said...

இரண்டாவது ஆண்டில் காலடி பதிக்கும் உங்கள் பணிக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!!!

என்றும் அன்புடன்

கிரி said...

தொடர்ந்து எழுத என் அன்பான வாழ்த்துக்கள்

விழியன் said...

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க.

Anonymous said...

திறம்பட தங்கள் பணி தொடர மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ..

கரவைக்குரல் said...

உங்கள் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் மகிழ்ச்சியுடன் கூடிய மிக்க நன்றி